வாலாஜாபாத்: அய்யம்பேட்டையில் கம்பிகளை ஏற்றிச்சென்ற லாரியின் பின்னால் பைக்கில் சென்றபோது, கம்பிகள் குத்தியதில் வாலிபர் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாலாஜாபாத் அடுத்த ஐயம்பேட்டை கந்தப்பர் தெருவை சேர்ந்தவர் பாபு (37). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். பாபு, மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணிக்காக அய்யம்பேட்டையில் இருந்து வாலாஜாபாத் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அய்யம்பேட்டை கால்நடை மருத்துவமனை அருகே, முன்னாள் சென்ற லாரியில் கம்பிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டு இருந்தது. இது தெரியாமல், லாரியின் பின்னால் சென்ற பாபு மீது கம்பிகள் குத்தியதில், பலத்த காயமடைந்து கீழே விழுந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து, வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.