ஓமலூர்: காதல் மனைவிக்கு தெரியாமல் அவரது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர், உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதால், அக்கா-தங்கை இருவரும் போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள பெரியசோரகை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், கடந்த ஓராண்டாக சுரேஷ்குமார், மனைவியை அடித்து உதைத்து, தாய் வீட்டுக்கு சென்று நகை, பணம் வாங்கி வருமாறு கூறி கொடுமை செய்து வந்துள்ளார். இதையறிந்த அப்பெண்ணின் 21 வயதான தங்கை, அக்காவை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் மனைவி இல்லாத நிலையில் தனியாக இருந்த சுரேஷ்குமார், தனது கொழுந்தியாளை பலவந்தமாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், தான் அழைக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருக்க வேண்டும் என மிரட்டி, பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில், மனைவியிடம் உனக்கு குழந்தை பிறக்கவில்லை. அதனால், உனது தங்கையை 2ம் திருமணம் செய்து கொள்கிறேன். மூன்று பேரும் வேறு ஊருக்கு சென்று, ஒன்றாக வாழலாம் என சுரேஷ்குமார் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியை அடித்து, வீட்டை விட்டு விரட்டியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அக்கா, தங்கை இருவரும், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் மீது புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவாக இருந்த சுரேஷ்குமரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், பாலியல் பலாத்கார வீடியோ குறித்து, அவரது செல்போனை ஆய்வு செய்ய சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.