தாம்பரம்: பழைய பெருங்களத்தூர், பார்வதி நகரை சேர்ந்தவர் ரேவதி (50). படப்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மகள் தீபிகாவுடன் (21) இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். மதனபுரம் அருகே எரிவாயு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடாமல், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியை கடக்க முயன்றபோது, நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து தாய், மகள் 2 பேரும் கீழே விழுந்தனர்.
அப்போது, பின்னால் வந்த பள்ளி வேனின் பின் சக்கரம் ஆசிரியை ரேவதி மீது ஏறி இறங்கியதால் படுகாயமடைந்தார். அவரது மகள் தீபிகா லேசான காயத்துடன் தப்பினார். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலத்த காயமடைந்த ரேவதியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ரேவதி, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.