ஈரோடு: ‘யாருக்கும் டாஸ்மாக்கை நடத்த வேண்டும் என்ற விருப்பம் இல்லை. படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்’ என ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். ஈரோடு மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில், ஈரோடு, குமலன்குட்டையில், பூமாலை வணிக வளாகம் ரூ.41 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் நேற்று பங்கேற்ற அமைச்சர் சு.முத்துசாமி அளித்த பேட்டி: அத்திக்கடவு -அவிநாசி திட்டம் தாமதமாக முக்கிய காரணம், கடந்த ஆட்சியில் திட்டத்தை தொடங்கியபோது முறையாக திட்டமிடாமல், நிலம் கையகப்படுத்தலில் பல பிரச்னைகள் நீடித்தன. தற்போது நாங்கள் பேசி தீர்வு கண்டு, நிலத்தை கையகப்படுத்தி ஒழுங்கு செய்துள்ளோம். அரசின் வருவாய்க்காக டாஸ்மாக் கடைகள் நடத்தப்படவில்லை. முதலமைச்சர் பேசும்போதுகூட, ‘டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம்’ என்றே கூறி உள்ளார். ஏற்கனவே 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பிராக்டிகலாக பார்க்க வேண்டும்.
யாருக்கும் டாஸ்மாக்கை நடத்த வேண்டும் என்ற விருப்பம் இல்லை. ஆனால், திடீரென மூடிவிட முடியாது. அப்படி மூடினாலும் உடனே வேறு மாதிரி மாற்றி பேசுவார்கள். எனவே, படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுவால் பாதித்தோருக்கு கவுன்சலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். கடைகளுக்கு புதிதாக மது வாங்க வரும் இளம் வயதினரை அடையாளம் காணும் விற்பனையாளர்கள், அவர்களை அழைத்து கவுன்சலிங் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செயல்படும் விற்பனையாளர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தையும் தெரிவித்துள்ளோம்.
மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட நாங்கள் எடுக்கும் நடவடிக்கை எதிர்க்கட்சியினரின் கண்களுக்கு தெரியவில்லை என நினைக்கிறேன். டாஸ்மாக் பணியாளர்களின் குறைகளை தீர்க்கவும், டாஸ்மாக் கடையின் வாடகை, மின் கட்டணத்தை நேரடியாக தலைமை அலுவலகத்தில் இருந்து செலுத்துதல் போன்ற சீரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். கடைகளை அதிகப்படுத்தும் எண்ணம் இல்லை. மாறாக ஏற்கனவே புகார்கள் வரப்பெற்ற 40 கடைகளை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.