பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் எழில்நகர் தொப்பை விநாயகர் தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (49). இவர் கார் டிரைவர். நேற்றிரவு தனதுகாரை நிறுத்தியிருந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில், கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் வெளியே வந்து பார்த்தபோது ஆயில் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி, தனது கார் மீது பலமாக மோதி தூக்கி வீசப்பட்டு பக்கத்தில் இருந்த மற்றொரு கார், 2 பைக்குகள் சேதமடைந்து கிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். அவரது கார் முழுவதும் நொறுங்கி கிடப்பது பார்த்து கண்ணீர் விட்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வியாசர்பாடி போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வந்து விசாரித்தனர். இதில், டேங்கர் லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் கார் மீது மோதியது தெரியவந்துள்ளது. இதையடுத்து டேங்கர் லாரியை ஓட்டிவந்த நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த அன்பு செல்வன் (30) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.