தஞ்சை: தஞ்சையில் மதுபானம் குடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். டாஸ்மாக் மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்களை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சையில் தென்கீழ் அலங்கம் பகுதியில் செயல்பட்டுவரக்கூடிய அரசு மதுபான கடை மற்றும் அதன் அருகிலேயே இயங்கி வரக்கூடிய மதுபான பாரில் நேற்றைய தினம் காலை 11:45 மணியளவில் சட்டவிரோதமாக மது வாங்கி அருந்திய குப்புசாமி, விவேக் ஆகிய 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. மதுவில் வேறு எதையாவது கலந்து குடித்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை முடிவில் இருவரும் அருந்திய மதுவில் சயனைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். டாஸ்மாக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணத்தின் அடிப்படையில் பார் உரிமையாளர் செந்தில் பழனிவேல், பார் ஊழியர் காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோத மது விற்பனையில், மதுபானக்கூட மேற்பார்வையாளர் உட்பட டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுபான பாரில் இருந்து தான் பாட்டில் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.