தஞ்சை: தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பு, முதுகலை, இளநிலை, தொகைநிலை கல்வி ஆகிய பிரிவுகளில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2019-20, 2020-21, 2021-22, 2022-23 ஆகிய நான்கு ஆண்டுகளில் படித்து முடித்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு விழா பல்கலைகழகத்தில் உள்ள சோழன் கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதையொட்டி தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு இன்று காலை 8 மணிக்கு வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து கவர்னர் காரில் புறப்பட்டு காலை 10 மணிக்கு தஞ்சை பல்கலைகழகம் வந்தார். இதற்கிடையில், தமிழக மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க மறுக்கும் கவர்னர் ரவியைக் கண்டித்து தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே கூடிய இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் அவருக்கு கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டமளிப்பு விழாவில், பி.எச்டி மாணவர்கள் 325 பேர் உள்பட 1,574 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கி பாராட்டி பேசினார். அதைதொடர்ந்து பகல் 12 மணியளவில் நடைபெற்ற தொலைநிலை கல்வி மூலம் பயின்ற 11,451 பேருக்கு, பட்டங்களை தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.