சென்னை: தமிழக இளைஞர்கள், மாணவர்களை போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற அதிமுக போராடி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ் நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பலமுறை சட்டமன்றப் பேரவையில் எடுத்துரைத்துள்ளேன். அதோடு, காவல்துறை மானியக் கோரிக்கையிலேயே பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை தொடர்பாக 2,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 148 குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதற்கு எனது எதிர்ப்பை பதிவு செய்தேன். தமிழக இளைஞர்களையும், மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து களத்தில் நின்று அதிமுக போராடி வருகிறது. சிறு சிறு குற்றவாளிகளை கைது செய்வதைப் போல், போதைப் பொருள் வியாபாரத்தின் ஆணிவேரை கைது செய்ய இதுவரை அரசு எடுத்த நடவடிக்கை என்ன?.