பட்டுக்கோட்டை: நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் மருத்துவராவது சவாலாக உள்ளது என்று பட்டுக்கோட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மாநில திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், 620 திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார். முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கொண்டிகுளம் திருமண மஹாலில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பழஞ்சூர் செல்வம் இல்லத்திருமணத்தை நடத்தி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘மணமக்கள் இருவருமே டாக்டர்கள். அவர்களை மனதார வாழ்த்துகிறேன். நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் இன்றைக்கு மருத்துவராவது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. நம் வீட்டுப்பிள்ளைகள் மருத்துவராகும் கனவை ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வை கொண்டு வந்து எப்படி பாழாக்கி விட்டது என்பது உங்களுக்கு தெரியும். கடந்த 5 நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்’ என்றார்.