Thursday, June 13, 2024
Home » விளையாட்டை மேம்படுத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்கம்: அமைச்சர் உதயநிதி தகவல்

விளையாட்டை மேம்படுத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்கம்: அமைச்சர் உதயநிதி தகவல்

by Karthik Yash

சென்னை: விரைவில் விளையாட்டை மேம்படுத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்துவது குறித்து விளையாட்டு பிரிவு செய்தியாளர்களுடன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். முதல்வர் வேண்டிய வசதிகளை செய்து தருகிறார். ஆனால் மற்ற மற்ற துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டி இருக்கிறது. அதனால் கூடுதல் நிதி கேட்காதீர்கள் என்று முதல்வர் சொல்லிவிட்டார். அதனால் தனியார் பங்களிப்புடன் விளையாட்டு வாரியாக கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் ஆகியோருக்கு தேவையான வசதிகள், செலவினங்களை பெற முடிவு செய்துள்ளோம்.

இப்படி பெருநிறுவன மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்படும். இந்த அறக்கட்டளைக்காக மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பார். மேலும் இந்த அமைப்பின் விளம்பர தூதுவராக கிரிக்கெட் வீரர் எம். எஸ்.தோனி நியமிக்கப்பட உள்ளார். இந்த அமைப்புக்கு என தனி இலச்சினை மற்றும் தனிப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அறிமுக நிகழ்ச்சியில் வெளியிடப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

மேலும் ஒவ்வொரு சிற்றூருக்கும் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்க 42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது‌. ஆக.10ம் தேதி முதல் சென்னையில் ஆசிய ஆடவர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி நடைபெறும். இதற்காக எழும்பூர் ஹாக்கி அரங்கம் 1.5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல் முதல்முறையாக சர்வதேச அளவிலான ஸ்குவாஷ், அலைச் சறுக்கு போட்டிகள் இந்த ஆண்டு நடத்தப்படும். அதற்கான நிதி உதவிகளை தமிழக அரசு வழங்கும். வீரர்களுக்கான நிதி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

7 + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi