சென்னை: முதல்வரின் சீரிய முயற்சியால் சுற்றுலாத்துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.பெரும்புதூரில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான ஓட்டலையும், காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் மற்றும் ஆலயம் ஓட்டல் ஆகியவற்றையும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த சுற்றுலாத்துறை, முதல்வரின் சீரிய முயற்சிகளால் விரைவான வளர்ச்சியைப் பெற்று இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு முழுவதும் 28 ஓட்டல்களை நேரடியாக நிர்வகித்து வருகிறது.
இவற்றில் 473 குளிரூட்டப்பட்ட அறைகளும், 199 சாதாரண அறைகளும், மலைப்பகுதி சுற்றுலாத்தலங்களில் 172 அறைகளும் என மொத்தம் 845 அறைகள் பொதுமக்களுக்கு தங்கும் வசதியை வழங்கி வருகின்றன. ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்பட முக்கிய நகரங்களில் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் நகரின் மையப்பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. கொரோனாவிற்கு பிறகு பயணிகள் எணணிக்கை 2022ல் 21,85,84,846 ஆக உயர்ந்து, இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 3 மாத காலத்தில் 6,64,90,154 என உயர்ந்துள்ளது. திருப்பெரும்புதூரில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான ஓட்டலையும், காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் மற்றும் ஆலயம் ஓட்டல் ஆகியவற்றையும் ஆய்வு செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.