Sunday, June 16, 2024
Home » தமிழ்நாட்டில் நல்லாட்சி, சிறப்பான முதலீட்டுச் சூழல் அமைந்திருப்பதால் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டில் நல்லாட்சி, சிறப்பான முதலீட்டுச் சூழல் அமைந்திருப்பதால் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Kalaivani Saravanan

சென்னை: தமிழ்நாட்டில் நல்லாட்சி, சிறப்பான முதலீட்டுச் சூழல் அமைந்திருப்பதால் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில், பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் உலகளாவிய நிர்வாக இயக்குநர்கள் குழுவினரை சந்தித்து உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், தமிழ்நாட்டிற்கும் செயிண்ட் கோபைன் நிறுவனத்திற்குமான உறவு ஏறத்தாழ 25 ஆண்டு வரலாறு கொண்டது. 1998ம் ஆண்டு ஜனவரி மாதம், திருப்பெரும்புதூரில் இந்நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்தவர், முத்தமிழறிஞர் கலைஞர்.

தமிழ்நாட்டில், திருப்பெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில், செயிண்ட் கோபைன் நிறுவனம் பல்வேறு தொழில் திட்டங்களை நிறுவி, இதுவரை ஏறத்தாழ 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளது. தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தையும் சென்னையில் அமைத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 9 அன்று, திருப்பெரும்புதூர் செயிண்ட் கோபைன் நிறுவனத்தில் மிதவைக் கண்ணாடிப் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு, நகர்ப்புற வனம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டேன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது செயிண்ட் கோபைன் நிறுவனம், ஒரகடத்தில் ஒரு புதிய உற்பத்தித் திட்டமும், திருப்பெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் திட்டங்களில் விரிவாக்கமும் மேற்கொள்ள உள்ளது. இம்மாநிலத்தில் நல்லாட்சி மற்றும் சிறப்பான முதலீட்டுச் சூழல் அமைந்திருப்பதற்கான அத்தாட்சியாகவே நான் கருதுகிறேன். சுமார் 3400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1150 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்று மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். உங்களது தொழில் முயற்சிகள் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் அனைவரையும் சென்னையில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி என குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில், செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் தலைவர் திரு. பியரி ஆன்ட்ரி டி சேலண்டர், தலைமை செயல் அலுவலர் திரு. பெனாய்ட் பாசின் உள்ளிட்ட செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண்ராய், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. வே.விஷ்ணு, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

1 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi