சென்னை: தமிழகத்துக்கு தேர்தல் பாதுகாப்புக்கு 200 கம்பெனி துணை ராணுவம் வர இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. சமீபத்தில் சென்னை வந்த இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழு அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் கருத்துக்கேட்பு கூட்டத்தை கூட்டி அவர்களின் கருத்துகளை பதிவு செய்தது. அதேபோல், தலைமைச்செயலாளர், காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அந்தவகையில் தேர்தல் களம் அரசியல் கட்சிகளிடையே தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனாவிற்கும், டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் எழுதிய கடிதத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாடாளுமன்ற தேர்தலையொட்டி தொகுதிக்குள் ஏற்கனவே பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், அதே நாடாளுமன்ற தொகுதிக்குள் பணி அமர்த்தப்படக்கூடாது. திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு தொகுதிகள் காலியாக உள்ளது தொடர்பான எந்தவித தகவலும் இதுவரை ஆவணங்களாக கிடைக்கப்பெறவில்லை. விஜயதரணி ராஜினாமா செய்த ஆவணங்களும் வரவில்லை என கூறியுள்ளார்.
இந்நிலையில்,அவர் அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 25 கம்பெனி ஆயுத பாதுகாப்பு படையினரை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஒன்றிய உள்துறை அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. அதன்படி, 15 கம்பெனி ஆயுத பாதுகாப்பு படையினர் மார்ச் 1ம் தேதியும், 10 கம்பெனி ஆயுத பாதுகாப்பு படையினர் மார்ச் 7ம் தேதியும் தமிழகம் வர உள்ளனர். கடந்த தேர்தலின்போது 160 கம்பெனி துணை ராணுவம் வந்தது. தற்போது 200 கம்பெனி துணை ராணுவம் பாதுகாப்புக்கு வர உள்ளது.