Saturday, April 27, 2024
Home » தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு: மனுக்களை வாபஸ் வாங்க இரண்டு நாட்கள் கெடு

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு: மனுக்களை வாபஸ் வாங்க இரண்டு நாட்கள் கெடு

by MuthuKumar

சென்னை: தமிழகத்தில் 39 தொகுதியிலும் 1,610 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று காலை தொடங்கிய வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவைடைந்தது. பல இடங்களில் முக்கிய வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டது. இதையடுத்து, மனுக்களை வாபஸ் வாங்க இரண்டு நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன. அனைத்து கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடுகளை முடித்துவிட்டு, தற்போது தலைவர்கள், சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம்தேதி தொடங்கி 27-ம் தேதியுடன் முடிவடைந்தது. கூட்டணி கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் போட்டிப் போட்டுக்கொண்டு தங்களது மனுக்களை தேர்தல் அலுவலகங்களில் தாக்கல் செய்தனர். ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக சென்று அவர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிந்தது. நேற்று இறுதி நாள் என்பதால் சுமார் 402 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் கடந்த 20-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளான நேற்று மாலை வரை 1,610 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 1,393 ஆண்கள், 217 பேர் பெண் வேட்பாளர்கள் ஆகும். அதிகப்பட்சமாக கரூர் தொகுதியில் 71 பேரும், குறைந்தபட்சமாக சிதம்பரம் தொகுதியில் 17 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஆண்கள் 12 பேரும், பெண்கள் 10 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீது இன்று காலை 11 மணி முதல் பரிசீலனை தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் மேற்பார்வையில் தொகுதிக்கான நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தது. வேட்புமனு பரிசீலனையின்போது வேட்பாளர்கள் தங்கள் சார்பாக வழக்கறிஞர்களுடன் பங்கேற்றனர். முறையாக கையெழுத்து போடப்படாத, ஆவணங்கள் இணைக்கப்படாத மற்றும் உரிய நபர்கள் முன்மொழியப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் பெரும்பாலான சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் மீதும் எதிர்ப்பு தெரிவித்ததால் பலரது மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டன. தற்போது வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து, வேட்புமனுக்களை வாபஸ் பெற விரும்புகிறவர்கள் 30ம்தேதி (சனி) மாலை 3 மணிக்குள் (இரண்டு நாட்கள்) வாபஸ் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது. அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi