கொழும்பு: இலங்கை தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பது தொடர்பாக கடந்த 1987ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து இலங்கை அரசியலில் 13ஏ சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த 13ஏ சட்டத்திருத்தம் தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கவும், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கவும் வகை செய்கிறது. ஆனால் இது இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இதுகுறித்து கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, “இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து அனைத்து கட்சிகளும் தங்கள் முன்மொழிவுகளை தெரிவிக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இலங்கையின் முக்கிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ் மக்கள் தங்களின் வசிப்பிடத்தில் சுயநிர்ணய உரிமைகளுடன் கூடிய கூட்டாட்சி முறை அமைய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகின்றனர். இதை மனதில் கொண்டு 13ஏ சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.