*ரெட்டியார்சத்திரம் திருமலைராயபுரம் விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
நிலக்கோட்டை : சந்திரயான் திட்டத்தில் சாதனை படைத்தவர்கள் போல் தமிழக அரசின் பாடத்திட்டத்தை முழுமையாக கற்றால் கண்டிப்பாக உயர்ந்த நிலையை அடையலாம் என ரெட்டியார்சத்திரம் திருமலைராயபுரத்தில் நடந்த விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீ ராமபுரம் பேரூராட்சி திருமலைராயபுரம், கே.புதுக்கோட்டை, சுள்ளெரும்பு பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, பேரூராட்சி தலைவர் சகிலா ராஜா முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
பின்னர் அளைச்சர் பேசியதாவது: தமிழக அரசின் கல்வி தரம் உலகிலேயே மிகச்சிறந்தது. அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளாக இரு மடங்கு அதிகரித்தள்ளது. இதற்கு காரணம் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்த திராவிட மாடல் ஆட்சி நாயகன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த தமிழக அரசுதான். நமது முதல்வர் நவீன முறை கல்வியின் மூலம் மாணவர்களை மேம்படுத்துவதில் பல்வேறு சிரத்தை எடுத்து புதிய, புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அரசு பள்ளி ஆசிரியர்களும் தன்நலம் கருதாமல் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி எதிர்கால சிற்பிகளாக செதுக்கி வருகிறார்கள். உலகமே வியந்து பாராட்டும் சந்திரயான்- 3 திட்டத்தை தலைமையேற்று செயல்படுத்தி சாதனை படைத்தது கலைஞரின் வெளிவந்த அரசு பள்ளி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே. எனவே அரசு பள்ளி மாணவர்கள் தங்களது தாய், தந்தையரின் உழைப்பை நினைத்து தமிழக அரசின் பாடத்திட்டத்தை முழுமையாக கற்றால் கண்டிப்பாக உயர்ந்த நிலையை அடையலாம்.
இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், கிருஷ்ணன், பேரூர் செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜேஸ் பெருமாள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், பேரூராட்சி துணை தலைவர் முருகேசன், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் பொண்மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வாஞ்சிநாதன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அருண் ஜெகநாதன், ஒன்றியகுழு உறுப்பினர் திருப்பதி, வடக்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் செல்வம், எம்எல்ஏ முகாம் அலுவலக அலுவலர் வடிவேல் முருகன், நிர்வாகி உதயக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் சந்திராதேவி நன்றி கூறினார்.