சென்னை: தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் மூலிகைச் செடிகள், சிறுதானிய கண்காட்சியை ஒன்றிய அமைச்சர் ஸ்ரீசர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார் தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று மூலிகைச் செடிகள் மற்றும் சிறுதானிய கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியை ஒன்றிய ஆயுஷ்துறை அமைச்சர் ஸ்ரீசர்பானந்த சோனோவால் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் சித்தா ஆசிரியர்கள், ஆராய்ச்சி அலுவலகங்கள் மற்றும் மாணவர்களுடன் சித்த மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்துகள் எந்தெந்த நோய்களுக்கு, எவ்வகை மருந்துகள் எந்த அளவில் அளிக்கப்படுகிறது என்பது குறித்து கேட்டார். பின்னர் சித்த மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டு, கண்காட்சி முழுவதையும் ஆர்வத்துடன் பார்வையிட்டு ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கேட்டார். அவருடன் சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் மீனாகுமாரி, ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் மாணவ – மாணவிகள் இருந்தனர்.