புதுடெல்லி: தேர்தல் விதிகளை மீறிய மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஆனந்த் எஸ் ஜோலே என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் கடந்த 9ம் தேதி பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் நேற்று விசாரிக்கப்பட இருந்த நிலையில், மனுவை விசாரிக்க இருந்த நீதிபதி திடீர் விடுப்பில் சென்று விட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.