சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மூட வேண்டும் என்று 1996ல் இருந்து மதிமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி வந்தது. இப்போது உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடியபோது காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டு 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு உச்ச நீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை முழு மனதோடு வரவேற்கிறோம். சிறப்பான வாதங்களை எடுத்து வைத்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், அரசின் சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுகள்.
நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ மாநில தலைவர்): உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, ஆலையை உடனடியாக அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தாமதமின்றி துவக்க வேண்டும். இதற்காக போராடி உயிர்த் தியாகம் செய்த போராளிகளுக்கு தமிழக அரசு நினைவுத் தூண் அமைத்திட வேண்டும்.