புதுடெல்லி: வெறுப்பு பேச்சு தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த அரசியல் விமர்சகர் கர்கா சட்டர்ஜி என்பவர், ‘‘என் மீது அசாம் அரசு பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதனால் கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் கோபப்படக் கூடாது.
மேலும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் அவற்றை புறக்கணிக்கக் கூடாது. இதுபோன்ற விஷயங்களுக்கு பதில் சொல்லவில்லை என்றால், நம்முடைய வேலையை சரியாக செய்ய முடியாது. இந்த காலத்தில் விமர்சனங்கள் என்பது பொதுவான நடைமுறையாகிவிட்டது. எனவே சில விஷயங்களைப் பற்றி கவலைப்படாமல் அமைதியாக இருப்பதே சரியாக இருக்கும்’’ என்று கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.