புதுடெல்லி: மின்னணு இயந்திரத்துடன் விவிபேட் ஒப்புகை சீட்டையும் எண்ணும் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை நூறு சதவீதம் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று அகர்வால் என்பவர் தொடர்ந்த பொதுநல மனுவை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது. மனுதாரர் தரப்பில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்கிறது என்பதை எங்களது தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் அதனை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் எது நடந்தாலும் தேர்தல் ஆணையம் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு நடக்கிறது என்பது வெறும் பயம் மட்டும் தானே தவிர மற்ற எதுவும் கிடையாது என்று தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 18 ம் தேதி ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமை அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்கு இயந்திரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.