சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: நியாய விலை கடைகளில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் பிரதிமாதம் வழங்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் கால தாமதம் ஆகிறது என்றும் பொருட்களின் அளவும், தரமும் குறைவாக இருப்பதாகவும் பொதுமக்கள் குறை கூறுகின்றனர். இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
குறிப்பாக பருப்பு மற்றும் ஆயில் தட்டுப்பாடு அவ்வப்போது உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு நியாயவிலைக் கடைகளின் மூலம் வழங்கும் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி இருப்பில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நியாயவிலை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.