நீலகிரி: மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சிறப்பு மலை ரயில் இம்மாதம் 29ம் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ளதற்கு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் மேட்டுப்பாளையத்தில் உதகைக்கு மலை ரயிலில் பயணம் செய்ய பெரிதும் விரும்புகின்றனர். தினமும் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மலை ரயில் முற்பகல் 11.55 மணிக்கு உதகையை சென்றடைகிறது.
பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையத்திற்கு திரும்பி வருகிறது. மலை பாதைகளில் இயற்கையை ரசித்தபடி செல்லும் இந்த பயணத்திற்காகவே வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் உதகைக்கு வருகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் மலை ரயில்களுடன் கோடை சீசனுக்காக சிறப்பு மலை ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 29ம் தேதி முதல் ஜூலை 1ம் வரை வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கள் வரை வாரந்தோறும் 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரயில் இயக்க தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் முடிவு செய்துள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வெள்ளி, சனி கிழமைகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு சனி, ஞாயிற்று கிழமைகளில் காலை 11.25 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதேபோல் உதகை-கேத்தி இடையே வெள்ளி முதல் திங்கள் வரை காலை 9.45, 11.30, மற்றும் பிற்பகல் 3.00 மணிக்கு சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.