Monday, May 20, 2024
Home » கோடை காலம் துவங்கும் முன்பே ஈரப்பதத்தின் அளவு குறைந்து வெயில் வாட்டி வதைக்கிறது: நீர்சத்து பழங்களை சாப்பிட மருத்துவர்கள் அறிவுரை

கோடை காலம் துவங்கும் முன்பே ஈரப்பதத்தின் அளவு குறைந்து வெயில் வாட்டி வதைக்கிறது: நீர்சத்து பழங்களை சாப்பிட மருத்துவர்கள் அறிவுரை

by MuthuKumar

சென்னை: ஓரிரு வாரங்களில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், இப்போதே ஈரப்பதத்தின் அளவு குறைந்து தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் நீர்சத்து மிகுந்த பழங்களை எடுத்து கொள்ள மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். கோடைகாலம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் தான். அதிலும் மக்கள்தொகை நிறைந்து எப்போதும் பரபரப்பாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் நிறைந்த இந்த சென்னை மாநகரில் கோடை காலத்தின் தாக்கம் ஆக்ரோஷமாக இருக்கும். சூரியனின் தாக்கத்தால் எழும் வெப்பம் ஒரு புறம், அதிகப்படியான வாகனங்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருப்பதால் ஏற்படும் வெப்பம் மறுபுறமும் சேர்ந்து சென்னையை வெப்பத்தில் மிதக்க வைக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடைகாலத்தின் தாக்கம் இருக்கும். இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் கோடை காலம் தொடங்க இருக்கிறது. எனினும் தற்போதே கோடை காலம் தொடங்கியது போன்று பல இடங்களில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் தற்போது காற்றில் ஈரப்பதத்தின் அளவு குறைந்து வெயில் கொளுத்த தொடங்கி விட்டது.

அந்த வகையில், நேற்று தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் அனலைக் கக்கியது. அதிகபட்சமாக ஈரோட்டில் நேற்று 100.4 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவானது. ஈரோட்டில் கடுமையான வெயிலின் தாக்கத்தால், பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது. அதேபோன்று, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் அதிகாலை நேரத்தில் இன்னும் பனி தாக்கமும் இருந்து வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் பனி முற்றிலும் விலகி வெயில் தாக்கம் தொடங்கி விடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 23ம்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அதேநேரம் வரும் 24ம் தேதியன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், அதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி நீர் சத்துள்ள காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இருமல் இருந்தால் மட்டும் பழங்களை தவிர்த்து காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம் உள்ளிட்ட அறிவுரைகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக நீர் சத்து நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிட்டால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

You may also like

Leave a Comment

twenty − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi