சென்னை: மாணவர்கள் வாக்காளர் அட்டையை சேகரிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. அனுப்பிய சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் மாளிகையில் கடந்த11-ம் தேதி ஆலோசனை நடத்தினார். அப்போது, முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்களை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க செய்வது தொடர்பாக வலியுறுத்தினார். ஆளுநரின் வாய்மொழி ஆணைப்படி கல்லூரி முதல்வர்களுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. பதிவாளர் கடந்த 14-ல் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். மார்ச் 19-ம் தேதிக்குள் கல்லூரி மாணவர்கள் விவரங்களை சேகரித்து வழங்கும்படி கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆளுநர் அறிவுறுத்தலை அடுத்து சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில் அது சர்ச்சையானது. கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அட்டை விவரங்களை சேகரிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பாஜக பிரச்சாரத்துக்கு உதவ மாணவர்களின் தரவுகள் சேகரிக்கப்படுவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும், கல்லூரி மாணவர்களும் வாக்காளர் அட்டை விவரங்களை தர மறுத்து போர்க்கொடி தூக்கினர். இதற்கு பல்கலை. சட்டங்கள் அனுமதிக்கிறதா என்றும் மாணவர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், கடும் கண்டனம் வலுத்த நிலையில் மாணவர்களின் வாக்காளர் அட்டை விவரங்களை சேகரிப்பதற்கான சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்வியியல் பல்கலை. கீழ் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் வாக்காளர் அட்டை விவரங்களை சேகரிக்க ஆளுநர் அறிவுறுத்தி இருந்த நிலையில் சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.