நெமிலி : ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 2022 ஜனவரி 26ம் தேதி பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் முன்னிலையில் விஞ்ஞானி பத்மஸ்ரீ பத்மபூஷன் சிவதாணு பிள்ளை இணைய வழியில் துவக்கி வைத்த ராக்கெட் அறிவியல் பயிற்சியில் தமிழகத்தை சார்ந்த 500 மாணவர்கள் பங்கு பெற்று பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டனர். 4 கட்டங்களில் முதலில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.
அதில் முதல்கட்டமாக 250 மாணவர்களும், இரண்டாவது கட்ட ஆன்லைன் தேர்வில் 130 மாணவர்களும், மூன்றாவது கட்டத் தேர்வில் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் ராக்கெட் மாடல் செய்தல் கண்காட்சி மூலம் தேர்வில் 75 மாணவர்களும், நான்காம் கட்ட ஆன்லைன் மூலம் நேற்று நடைபெற்ற தேர்வில் 50 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வருகிற ஜூன் மாதத்தில் ரஷ்யாவில் மாஸ்கோவில் அமைந்துள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வுமையத்தை பார்வையிட செல்ல இருக்கிறார்கள்.
அதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 4 அரசு பள்ளிகளை சார்ந்த 6 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அதன்படி, திருமால்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தருண் குமார் (12ம் வகுப்பு), யோகேஷ் (11ம் வகுப்பு), சண்முகவேல் (12ம் வகுப்பு), மூதூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி கதிரவன் (10 ம் வகுப்பு), குருவராஜப்பேட்டை மங்கலங்கிழார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வெங்கடேசன் (12ம் வகுப்பு), காவேரிப்பாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி யுவ (11ம் வகுப்பு) ஆகிய 6 மாணவர்கள் நேற்று தேர்வு செய்யப்பட்டு வரும் ஜூன் மாதம் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பார்வையிட செல்ல உள்ளனர். இவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் சதீஷ்குமார், ரமேஷ்பாபு, பாலச்சந்தர் மற்றும் அஜீதா ஆகியோரும் செல்கின்றனர். மாணவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.