ஊட்டி: ஊட்டி அருகே பகல்கோடு பகுதியை சேர்ந்தவரின் மகள் ஊட்டி அருகே உள்ள எச்பிஎப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர் இரவு வரை வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆங்காங்கே தேடி சென்று உள்ளனர். அப்போது அங்கர்போர்டு எஸ்டேட் பகுதிக்கு செல்லும் சாலையோரம் உள்ள வனப்பகுதியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்துள்ளனர். தகவலறிந்து போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வீட்டிற்கு செல்வதற்காக எச்பிஎப் பகுதியில் அந்த மாணவி பஸ்சுக்காக காத்து நின்றபோது கக்கோடு மந்து பகுதியை சேர்ந்த ராஜ்னேஷ் குட்டன் (25) என்பவர், மாணவியை தனது காரில் அழைத்து சென்று அங்கர்போர்டு பகுதிக்கு செல்லும் வழியில் வனப்பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வாலிபர் ராஜ்னேஷ் குட்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.