சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மீது, மாணவி பாலியல் புகார் அளித்த விவகாரத்தில், துணை வேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த பிரேம்குமார் மீது பல்கலை மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதுபோன்ற புகாரை, அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விசாகா கமிட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த கமிட்டி விசாரித்து, தவறு இருக்கும் பட்சத்தில் காவல்துறைக்கு புகாரை அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், மாணவி கொடுத்த புகாரை, விசாகா கமிட்டிக்கு அனுப்பாமல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவின் பேரில், பொறுப்பு பதிவாளர் தங்கவேல், சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
அதன் பேரில், போலீசார் வழக்கு பதிந்து பேராசிரியர் பிரேம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி சுமதி முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், உதவி பேராசிரியர்கள் ரவிச்சந்திரன், ஜெயவீர தேவன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் உதவி பேராசிரியர் பிரேம்குமார் தரப்பிலான வழக்கறிஞர் மாசிலாமணி, குறுக்கு விசாரணை நடத்தினார். உதவி பேராசிரியர் பிரேம்குமாரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், புகாரை முறையாக விசாரிக்காமல், விசாகா கமிட்டிக்கு அனுப்பி வைக்காமல், மாணவி புகார் கொடுக்காத நிலையில், இவர்களே புகாரை கொடுத்தனர் என பேராசிரியர் தரப்பில் வாதிடப்பட்டது. இதில் அரசு வழக்கறிஞர் இசையமுதன் ஆஜராகி வாதிட்டார்.