குன்றத்துார்: குன்றத்தூர் அருகே பொதுத்தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் எழுது பொருட்கள் வழங்கி வாழ்த்தினார். பிளஸ் 2 மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன், 10, 11, 12ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்களை வழங்கினார். அப்போது அவர் மாணவர்களிடம் பேசுகையில், தேர்வு குறித்து பயம் வேண்டாம். நீங்கள் தினமும் படித்த பாடப் புத்தகத்தில் இருந்துதான் கேள்வி வரப்போகிறது. அதனால் எதற்கும் பயப்படாமல் தேர்வு எழுத வேண்டும். அதிக மதிப்பெண் பெற்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பெருமை தேடித் தர வேண்டும் என்றார்.
புது ஜோடிக்கு வாழ்த்து: கோவூர் பகுதியில் திண்ணை பிரசாரத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, அங்கிருந்த ஒரு வீட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த புதுமண தம்பதி இருப்பது அமைச்சருக்கு தெரிய வந்தது. உடனடியாக அமைச்சர் அந்த வீட்டிற்குள் சென்று புதுமணத் தம்பதியை வாழ்த்திவிட்டு மீண்டும் தனது திண்ணை பிரசாரத்தை தொடர்ந்தார். அப்போது அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசு மக்களுக்கு செய்த சாதனைகளை திண்ணையில் அமர்ந்தவாறு அங்கிருந்த பெண்களிடம்
எடுத்துரைத்தார்.