சென்னை: சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி, கொங்கராயகுறிச்சியில் உள்ள வீரபாண்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த அரசு ஆவண செய்யுமா, கைலாசநாதர் திருக்கோயிலில் சித்திரை மாதம் திருவிழா நடைபெற உள்ளதால், தேரோட்டம் நடத்த ஏதுவாக புதிய தேர் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா எனவும் வைகுண்டம் ஊர்வசி அமிர்தராஜ்(காங்கிரஸ்) கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வீரபாண்டீஸ்வரர் திருக்கோவிலுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாகவும், 8 சன்னதிகள் உள்ள நிலையில் 8 சன்னதிகளுக்கும் தொல்லியல் துறை மண்டல, மாநில குழு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், வரும் மார்ச் 5ஆம் தேதி பாலாலயம் நடத்தப்பட உள்ளது. மேலும், திமுக அரசு பொறுப்பேற்ற பின் 48 புதிய தேர்கள் ரூ.71 கோடி செலவில் உருவாக்க பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், 48 திருக்கோவில்களில் தேர் மரம் மாற்றுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
கைலாசநாதர் கோவிலுக்கு ஒரு கோடியே 16 லட்சம் செலவில் தேர் உருவாக்க உபயதாரர் நிதியை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினால் இந்த மாத இறுதிக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்