தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே நவலட்சுமிபுரத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கி இறந்த முதியவர்கள் 4 பேரின் சடலம் 3 நாட்களுக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்தது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில், வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது. இருப்பினும், சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் மக்கள் சிக்கியுள்ள பகுதிகளில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மீட்புப்படையினர் துரிதமாக பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே நெஞ்சை பதற வைக்கும் துயரச் சம்பவ நடந்துள்ளது. மழை வெள்ளத்தால் நவலட்சுமிபுரத்தில் 2 முதியவர், 1 பெண் உட்பட 3 பேர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இந்த பகுதியில் 2 மூதாட்டி, 2 முதியவர் என 4 பேர் கனமழையால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்குகளை செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே மீட்படையினர் இந்த பகுதிக்கு வந்து 4 பேரின் உடலை மீட்டு அவர்களுக்கான இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 3 நாட்களுக்குப் பிறகு வெளி உலகத்துக்கு தெரியவந்த கோரமான பாதிப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.