Monday, June 17, 2024
Home » இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக அளவில் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக அளவில் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

by Karthik Yash

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால், கடந்த 9 மற்றும் 13ம் தேதிகளில் கைது செய்யப்பட்ட 31 தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து 1974ல் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், பாக் ஜலசந்தியில் இரு நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடிக்க பாரம்பரிய உரிமை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, பாக் ஜலசந்தியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 1983 முதல் 2013 வரை 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 439 பேர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவு அமைச்சகத்துக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களின் வாழ்வாதார பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மவுரியா ஆஜராகி, தொடர்ந்து இதுபோன்று மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். இதுதொடர்பாக, ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மீனவர்கள் விடுதலைக்காக தூதரக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தமிழ்நாடு அரசு தரப்பில், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like

Leave a Comment

fifteen + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi