கொழும்பு: பெட்ரோலில் இயங்கும் ஆட்டோக்களை மின்சார வாகனங்களாக மாற்றும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையை மீட்டெடுக்கும் முயற்சியை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. எரிபொருட்களின் தட்டுப்பாட்டால் அண்மை காலத்தில் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அதன் தேவையை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் முடிவு எடுத்துள்ள இலங்கை அரசு, பெட்ரோலில் இயங்கும் 5 லட்சம் ஆட்டோக்களை, அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக ஐ.நா. உதவியுடன் 200 ஆட்டோக்கள் மின் வாகனங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதில் ஒருமுறை முழுமையாக மின்னூட்டம் செய்தால் 80 முதல் 100 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எரிபொருள் சிக்கனத்திற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.