ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 32வது நாளாக நேற்று ஒற்றை காலில் நின்றபடி நூதன முறையில் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக சிஐடியு, ஐஎப்டியூ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கன்வாடி பணியாளர்கள் கூறியதாவது:ஆந்திர மாநிலத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்களின் குடும்பங்கள் கஷ்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். மாநில அரசு உடனடியாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். அதேபோல் அதிகாரிகளின் மிரட்டல் இருக்கக்கூடாது.
மேலும் அங்கன்வாடி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மாநில அரசு ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15 ரூபாய் வீதம் நிதி ஒதுக்குகிறது. இந்த நிதியால் அங்கன்வாடி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் முதல் அரிசி பருப்பு வரை அனைத்தும் உயர்ந்துள்ளது. ஆகவே ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 ரூபாய் வீதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கூறினர்.