தேவகோட்டை: தேவகோட்டையில் அணில் சேமியா பாக்கெட்டில் தவளை இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம நகர் காடேரி அம்பாள் நகரில் வசித்து வருபவர் பூமிநாதன் (37). இவர் நேற்று ராம நகர் தாணிச்சா ஊரணி ரோட்டில் உள்ள ஒரு மளிகைக்கடையில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கினார். அதில் இருந்த அணில் சேமியா பாக்கெட்டை உடைத்தபோது, இறந்து காய்ந்த நிலையில் தவளை ஒன்று இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடையின் மூலம் அணில் சேமியா நிர்வாகத்திற்கும் தகவல் அளித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அணியல் சேமியா நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.