Sunday, June 16, 2024
Home » ஆன்மிகவாதிகள் பாராட்டு

ஆன்மிகவாதிகள் பாராட்டு

by Karthik Yash

தமிழக அரசு பொறுப்பேற்ற 30 மாதங்களில் சத்தமில்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு கும்பாபிஷேகமும், ரூ.5 ஆயிரம் கோடி கோயில் நிலங்களும் மீட்கப்பட்டுள்ளது. பல சிறப்பான புதிய திட்டங்களை தமிழக அரசு அறிவித்து பொதுமக்களின் மனதில் இடம் பிடித்து விட்டதாக ஆன்மிகவாதிகள் பலரும் பாராட்டுகின்றனர். பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தாத கோயில்களை தற்போதைய தமிழக அரசு இனம் கண்டு அதனை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தி வருகிறது. ஒரு கோயிலை புனர் நிர்மாணம் செய்வது என்பது மிகச்சிறந்த பணி. அந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது என்பது மிகப்பெரிய பணிகளில் ஒன்று.

தமிழக அரசு, தமிழகத்தில் இதுவரை 1,140 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி உள்ளது. 5 ஆண்டுகளுக்குள் 20 ஆயிரம் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த இலக்கு நிர்ணயித்து, அதற்கான தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, இந்து சமய அறநிலையத்துறைக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டு ஏராளமான பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்துக்களுக்கு எதிரான அரசு என்ற விமர்சனம் தவிடுபொடியாகும் அளவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் பல்வேறு பணிகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.

இந்து மதத்திற்கு அரசு எதிரி இல்லை, திரிகள் என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் காலம் பொற்காலமாக இருக்கும் என பெருமைப்பட அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு பெருமிதத்துடன் கூறியுள்ளார். 48 முதுநிலை கோயில்களை ஒருங்கிணைத்து சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மகா சிவராத்திரி திருவிழா, நவராத்திரி கொலு கொண்டாட்டம், ஆடி மாதம் அம்மன் கோயில் சுற்றுலா, புரட்டாசி மாதம் பெருமாள் கோயில்கள் சுற்றுலா, கந்த சஷ்டி முருகன் கோயில் சுற்றுலா என பல சிறப்பான திட்டங்களை அறிவித்து மக்களின், மனதில் அரசு இடம் பிடித்து விட்டது.

இந்த அரசை ஆதீனங்கள், மடாதிபதிகள் மற்றும் ஆன்மிகவாதிகள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதனை பொறுக்காத சிலர், இந்து சமய அறநிலையத்துறை மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். சமீபத்தில் திருச்செந்தூரில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 40 லட்சம் பக்தர்கள் திரண்டனர். சிறு அசம்பாவிதமும் இல்லாமல் விழாக்கள் நடந்து முடிந்துள்ளது.
திருக்கோயில் அறப் பணிகள், திருக்கோயிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டது. கோயில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யும் பணிகளும் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு பொறுப்பேற்ற 30 மாதங்களில் 653 கோயில்களுக்கு சொந்தமான ரூ.5,171 கோடி மதிப்பீலான 5,721.19 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. தமிழக திருக்கோயில்களின் பிரசாதங்கள் காஷ்மீரிலும் பக்தர்கள் வாங்கலாம் என்ற அடிப்படையில் தபால் துறை மூலம் பிரசாதம் வழங்கப்படும் திட்டமும் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. புகழ் பெற்ற தலங்களில் விஐபி தரிசனம் ரத்து, ஏழை, பணக்காரன் என இல்லாமல் அனைவருக்கும் சமமான சுவாமி தரிசனம் என ஆன்மீகவாதிகள் பாராட்டும் அரசை, சிலர் பாராட்ட மனம் இல்லையென்றாலும் சேற்றை வாரி இறைக்காமல் இருக்கலாமே.

You may also like

Leave a Comment

nineteen + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi