வள்ளியூர்: மணிப்பூர் மாநிலத்தில் நீடிக்கும் கலவரம் ஓய்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டி நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனி மாதா ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 50 நாட்களை கடந்து அடிப்படை உரிமைகளுக்காக நீடித்து வரும் கிளர்ச்சியில் பலர் உயிரிழந்துள்ளனர். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு அதற்குரிய நடவடிக்கையை கையாள வேண்டும் என்ற நோக்கத்தில் நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனி மாதா ஆலயத்தில் திருத்தல அதிபர் ஜெரால்ட் எஸ் ரவி, அருட்தந்தை வளன் அரசு தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதை முன்னிட்டு 53 ஜெபமாலை மணி ஜெபிக்கப்பட்டு, ஆலயத்தை சுற்றி பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பவனி சென்றனர். தொடர்ந்து பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகள் வாயிலாக மணிப்பூர் மாநிலத்தில் அமைதியின் நோக்கத்தை கருத்தில் கொண்டு அதிசய பனி மாதா ஆலயத்தில் பக்தர்கள் சார்பில் பல்வேறு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் செய்திருந்தார்.