சென்னை: தென்சென்னை தொகுதி வாக்காளர்களின் குடும்பத்தில் ஒருவராக தமிழிசை செயல்படுவார் என தமிழிசையை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டார். தென்சென்னை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்திலும், வீடு வீடாக சென்றும் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
வாக்கு சேகரிக்கும் இடங்களில் அப்பகுதி மக்கள் அவருக்கு மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது ஜி.கே.வாசன் பேசியதாவது:
தமிழிசை போட்டியிடுவதன் மூலம் தென் சென்னை தொகுதி அதிர்ஷ்டமான தொகுதியாக மாறியுள்ளது. தமிழிசைக்கு வாக்கு கேட்பதை கனவா ? நனவா என எண்ணி பார்க்கிறேன். ஒரு மாநில ஆளுநராக இருப்பவர்களுக்கே வேலைப் பளு அதிகம் இருக்கும். ஆனால் தமிழிசையின் உழைப்பை பார்த்து இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநர் ஆக்கினர். நேற்று வரை ஆளுநராக இருந்தவர் இன்று பா.ஜ.கவின் சாதாரண காரிய கர்த்தாவாக நின்று கொண்டிருக்கிறார். பிரதமர் பல முறை தமிழிசையை பாராட்டியுள்ளார். சிறு வயதிலேயே காமராசர் ஆசியை பெற்றவர்.
தமிழிசை எங்கிருந்தாலும் அவருக்கு குமரி அனந்தனின் ஆசி உண்டு. இன்றைய பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு அன்றே உரம் போட்டவர் தமிழிசை. தமிழகத்தில் வாக்காளர்களுக்கு மறதி அதிகம் ஆகிவிட்டது. குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய கடைசி 48 மணி நேரத்தில் வேட்பாளர்களை மறந்து போகின்றனர். நல்லவர்களுக்கு வாக்களிக்காமல் மற்றவர்களுக்கு வாக்களித்தால் உங்கள் வாக்கை குப்பை தொட்டியில் போட்டதற்கு சமம். சாதாரண மக்களின் நாடி நரம்புகளை உணர கூடியவர் தமிழிசை. இந்த தொகுதி வாக்காளர்களின் குடும்பத்தில் ஒருவராக செயல்படக் கூடியவர். நேர்மை , எளிமை , வெளிப்படை தன்மை, தொகுதியின் பிரச்னையை டெல்லியில் வாதாடி போராடி தீர்க்க வேண்டும் என்றால் நீங்கள் தமிழிசைக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.