சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்தியா கூட்டணி கட்சிகளில் உள்ள தேசிய அளவிலான பெண் தலைவர்கள் கலந்து கொள்ளும் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆனைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண், விஜய் வசந்த் எம்பி, மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், சிரஞ்சீவி, இல.பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், டில்லி பாபு, அடையார் துரை, எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காவிரி விவகாரத்தில் பாஜ போராட்டம் நடத்த வேண்டும் என்றால் எடியூரப்பா, பொம்மைக்கு எதிராகத் தான் போராட்டம் நடத்த வேண்டும்’’ என்றார்.