திருச்சி: திருச்சி பாலக்கரை ஆழ்வார்தோப்பை சேர்ந்த அல்லாபிச்சை மகன் முகமது ரியாஸ் (23). டிப்ளமோ படித்துவிட்டு வேலை எதுவும் இன்றி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நிலையால் பாதிக்கப்பட்டு இருந்த அல்லாபிச்சை நேற்றுமுன்தினம் இறந்தார். இதனால் மனஉளைச்சலில் இருந்த முகமது ரியாஸ், நேற்றுமுன்தினம் இரவு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே அரிஸ்டோ ரவுண்டானாவுக்கு வந்தார். அப்போது திடீரென 50 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த முகமது ரியாஸ், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.