சேலம்: திடக்கழிவு மேலாண்மை விவகாரத்தில் சேலம் மாநகராட்சிக்கு ரூ.1.75 கோடி அபராதம் விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அளித்துள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் தினமும் சுமார் 400 டன் குப்பை சேகரமாகிறது. இதனை முறைப்படி அகற்றி அழிக்க திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த 2020 காலக்கட்டத்தில் செட்டிச்சாவடிக்கு குப்பைகளை கொண்டு சென்று கொட்டி வைத்தனர். அப்போது அந்த குப்பையில் ஏற்படும் தீயினால் காற்றில் மாசு ஏற்பட்டது. இதுதொடர்பாக மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது, சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஒரு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதில், செட்டிச்சாவடியில் குப்பைகளை கொட்டி வைத்து முறையாக அழிக்காததால் ஏற்பட்ட மாசு தொடர்பாக 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை ஒட்டு மொத்தமாக ரூ.1.75 கோடி அபராத தொகை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு மாநகராட்சி தரப்பில், தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை குறித்தும், மாநகரில் பல்வேறு இடங்களில் குப்பையை அழித்து உரம் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் இயங்குவது தொடர்பாகவும் விரிவான அறிக்கையை பசுமை தீர்ப்பாயம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.