புனே: சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டது தொடர்பாக மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் பலியானார். 8 பேர் காயமடைந்தனர். சதாரா மாவட்டம், கடாவ் பகுதிக்கு உட்பட்ட புசேசவாலி கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மற்றொரு பிரிவு குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டுள்ளார்.இது வைரலானதை அடுத்து நேற்று முன் தினம் இரண்டு பிரிவினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. மத வழிபாட்டு தலமும் சேதப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கலவரம் தீவிரமடைவதை தடுப்பதற்காக அந்த பகுதியின் இணையதள சேவையை துண்டித்தனர். பின்னர் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் மோதலில் படுகாயமடைந்த ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 8 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றதாகவும், கலவரம் நடந்த பகுதியில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.