நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் பனி பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலை பிரதேசமான உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்திலேயே உறைபனி காலம் தொடங்கும். ஆனால் நடப்பு குளிர்கால சீசனை பொறுத்தவரையில் சுமார் 75 நாட்கள் தாமதமாக தொடங்கியிருக்கிறது. இதனால் ஒருவார காலமாகவே குளிரின் தாக்கம் என்பது வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் இரவு நேரங்களில் கடுமையான குளிரும் நிலவுகிறது.
இதன் காரணமாக அதிகாலை வேளையில் உறைபனி என்பது பல்வேறு பகுதிகளில் படர்ந்து காணப்படுகிறது. உதகை நகரை பொறுத்தவரையில் ஒருவார காலமாகவே காஷ்மீரை போல வெள்ளம் கம்பளம் போர்த்தியது போல காட்சியளிக்கிறது. உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸாக உள்ளது. குறிப்பாக தலைகுந்தாவில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் நிலவுவதால் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் பொதுமக்கள் நடமாற்றம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.