*நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை
அணைக்கட்டு : சிவநாதபுரம்-அத்தியூர் வரை புதிதாக அமைக்கப்பட்ட தரமற்ற தார் சாலை குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சி சிவநாதபுரம்-அத்தியூர் வரை செல்லும் சாலை சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதை தொடர்ந்து ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியது.
இருப்பினும் பணிகள் முழுமை பெறாமல் பாதியிலே இருந்தது. தொடர்ந்து அதன்மேல் கடந்த சில நாட்களாக தார்போட்டு சாலை அமைக்கும் பணிகள் நடந்தது. அதன்படி தார் போடும்போது முழுமையாக போடாததால் தார் சாலை தரமற்ற சாலையாக உள்ளதாக பொதுமக்கள் முறையிட்டு வந்தனர். தொடர்ந்து நேற்று தார் சாலை அமைத்த பின் அதற்கான கோடு போடுவதற்கான மெஷின் வந்தது.
சாலை தரமாக இல்லாததால் அவற்றில் கோடு போட்டு பணிகள் முடிந்துவிட்டதாக நீங்கள் கூறுவீர்கள் என அவர்களிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டு பிரச்னை செய்தனர். தொடர்ந்து அப்போதே அவர்கள் முன்னிலையில் போடப்பட்டுள்ள தார்சாலையின் தாரை கைகளால் பெயர்த்து காண்பித்தனர். கோடு போட வந்த மிஷினாலே அந்த சாலையின் தார்கள் பெயர்ந்து சேதமானது. இதையடுத்து கோடு போடும் பணியை செய்யாமல் அவர்கள் அங்கிருந்து மிஷின் எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். தாரை முழுமையாக போட்டு சாலை தரமான தார்சாலையாக மாற்றியமைக்க அமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.