அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்கள் 25 மற்றும் 27 வயது சகோதரிகள். இருவரும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை ஊருக்கு அருகில் வேலை பார்க்கும் பனியன் கம்பெனியில் சம்பளம் வாங்க வந்த அக்கா, தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது டூவீலரில் வந்த அருப்புக்கோட்டை அருகே உள்ள சேதுராஜபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சகோதரிகளிடம், ‘உங்களது மாமா விபத்தில் சிக்கிவிட்டார்’ என தெரிவித்துள்ளார். இதனால், பதறிப்போன சகோதரிகள் இருவரும், தங்களை டூவீலரில் ஏற்றிக் கொண்டு விபத்து நடந்த இடத்தில் விடும்படி கூறியுள்ளனர்.
இதையடுத்து சகோதரிகள் இருவரையும் டூவீலரில் ஏற்றிக் கொண்டு ராஜ்குமார் காட்டுப்பகுதி வழியாக சென்றார். அப்போது, காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த 4 பேர், ராஜ்குமாரை தாக்கியது போல நடித்து சகோதரிகள் இருவரையும் கூட்டுப் பலாத்காரம் செய்துவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து சகோதரிகள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, 17 வயது சிறுவன், ராஜ்குமார் உட்பட 5 பேரை கைது செய்தனர்.