செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள்கோவில், பகத்சிங் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சசிகலா (37). இவர்களது, வீட்டின் மற்றொரு பகுதியில் உள்ள வீட்டில் தேனி மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் தனது மனைவி பத்மபிரியா (27) வாடகைக்கு குடியிருந்தார். இவர்கள் கூலிவேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் வீட்டு உரிமையாளர் விஜயகுமார் மற்றும் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். அச்சமயத்தில், பத்மபிரியா, விஜயகுமாரின் வீட்டுக்குள் நுழைந்து, அங்கு பீரோவில் இருந்த எட்டரை சவரனை திருடிக்கொண்டு தலைமறைவானார்.
இப்புகாரின்பேரில், மறைமலைநகர் எஸ்ஐ சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பத்மபிரியா குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டு உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து தங்க நகைகளை திருடி தலைமறைவான பத்மபிரியா, மகேந்திராசிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருவது போலீசாருக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மகேந்திராசிட்டி பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று, அங்கு வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பத்மபிரியாவை மடக்கி பிடித்தனர்.
பின்னர், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் வீட்டு உரிமையாளரின் வீட்டிலிருந்து எட்டரை சவரன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர், அவரிடம் இருந்து எஸ்ஐ சுரேஷ்குமார் எட்டரை சவரன் நகைகளை பறிமுதல் செய்து, விஜயகுமார் தம்பதியிடம் ஒப்படைத்தார். பின்னர், பத்மபிரியாவை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.