புவனேஸ்வர்: ஒடிசா மாநில காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை ேபாலீசார், ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடிஐ ஆசிரியர் பதானிசமந்த் லெங்கா (35), சரோஜ் குமார் நாயக் (26), சவுமியா பட்டநாயக் (19) ஆகிய மூன்று பேரை ‘சிம்’ கார்டு மோசடி மற்றும் பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடர்பு கொண்ட விவகாரம் தொடர்பாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட மூன்று பேரும், அதிக எண்ணிக்கையிலான ‘சிம்’ கார்டுகளை மோசடி செய்துள்ளனர். கடவுச்சொற்களை (ஓடிபி) பாகிஸ்தானிய உளவுத்துறை ஆப்பரேட்டிவ் (பிஐஓ) மற்றும் ஐஎஸ்ஐ ஏஜென்டுகளுக்கு பகிர்ந்துள்ளனர்.
இவர்கள் மற்றவர்களின் பெயர்களில் அதிக எண்ணிக்கையிலான ‘சிம்’ கார்டுகளை வாங்கி, அதன் ஓடிபி-களை பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ ஏஜென்டுகளுக்கு விற்றுள்ளனர். அதற்கு ஈடாக பல லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். ராஜஸ்தானில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ‘ஹனி-ட்ராப்’ (பாலியல் புகார்) பெண் ஒருவருடனும் இவர்களுக்கு தொடர்பு இருந்துள்ளது. உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 19 செல்போன்கள், 47 சிம் கார்டுகள், 61 ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டன’ என்று கூறினர்.