* மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவுடன் மோதிய அரினா சபலென்கா 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார். அமெரிக்காவின் கோகோ காப், ரஷ்ய வீராங்கனைகள் எகடரினா அலெக்சாண்ட்ரோவா, அனஸ்டசியா பாவ்லியுசென்கோவா ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
* இலங்கை – வங்கதேசம் இடையே சிலெட் அரங்கில் நடந்து வரும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 280 ரன் குவித்த நிலையில், வங்கதேசம் 188 ரன்னுக்கு சுருண்டது. தைஜுல் அதிகபட்சமாக 47 ரன் எடுத்தார். இலங்கை பந்துவீச்சில் விஷ்வா 4, ரஜிதா, லாகிரு தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 2ம் நாள் முடிவில் இலங்கை 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்துள்ளது.
* ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் இமத் வாசிம் தனது முடிவை மாற்றிக்கொண்டு, ஐசிசி டி20 உலக கோப்பையில் விளையாடத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். ஜூன் மாதம் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கான் பாகிஸ்தான் அணியில் இமத் வாசிம் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
* பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) முன்னாள் தலைவர் ஷாகாரியர் கான் (89 வயது), லாகூரில் நேற்று காலமானார். இவர் 2003-06 மற்றும் 2014-17ல் பிசிபி தலைவராக பதவி வகித்துள்ளார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
* சுவிஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்திய நட்சத்திரம் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றார். காலிறுதியில் சீன தைபே வீரர் சியா ஹவோ லீயுடன் நேற்று மோதிய கிடாம்பி 21-10, 21-14 என்ற நேர் செட்களில் வென்றார்.