பாட்னா: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நவ்ஜோத் சிங் சித்துவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது,பீகார் மாநிலம், கத்திஹாரில் நடந்த கூட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து பேசும்போது, மத அடிப்படையில் வாக்குகளை கோரினார் என வழக்கு பதியப்பட்டது.
இதை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதி சந்தீப்குமார், சித்துவின் பேச்சு, வகுப்புவாத பதற்றத்தையும், வன்முறையையும் சித்தரிக்கவில்லை. முஸ்லிம் வாக்குகளை ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி பிரிப்பது குறித்து எச்சரிக்கை விடுத்து பேசினார். மத அடிப்படையில் வாக்கு கேட்டார் என்பதை ஏற்க முடியாது என்று கூறி அவர் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.