சேலம் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பரமன் மகன் சதீஷ் புதல்வன் (27). இவர், அப்பகுதியில் உள்ள சில்லி சிக்கன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 7ம் தேதி கடையில் இருந்தபோது, கருங்கல்பட்டி தெற்கு முனியப்பன்கோயில் தெருவை சேர்ந்த முரளிதரன் (23) என்பவர், காசு கொடுக்காமல் சில்லி சிக்கன் கேட்டுள்ளார். அதற்கு சதீஷ் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் சில்லி சிக்கன் கடைக்கு முரளிதரன் வந்துள்ளார். அவர், மீண்டும் தனக்கு சில்லி சிக்கன் கொடுக்காவிட்டாலும் தூள் கொடு எனக்கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள், முரளிதரனை சத்தம் போட்டு விரட்டி விட்டுள்ளனர்.
இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் சிக்கன் கடையை ஊழியர் சதீஷ் புதல்வன் எடுத்து வைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த முரளிதரன், திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், சதீஷ்புதல்வனின் வயிறு, கழுத்து, தோள்பட்டை, முதுகு உள்ளிட்ட 9 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. ரத்தம் கொட்டியநிலையில் அவர் சரிந்து விழுந்தார். கடையில் வேலைபார்க்கும் இதர ஊழியர்கள் வந்து சதீஷ்புதல்வனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்திக்குத்தில் ஈடுபட்ட முரளிதரன் தப்பியோடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சதீஷ் புதல்வனை முரளிதரன் கத்தியால் குத்தும் சம்பவத்தை செல்போனில் சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைராக பரவி வருகிறது.